நியுசிலாந்துக்கு பயணமான 248 இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

Sri Lanka Tamil diaspora New Zealand
By Jenitha Apr 08, 2023 12:01 AM GMT
Jenitha

Jenitha

2019 இல் நியுசிலாந்துக்கு ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொண்ட இலங்கையர்கள் தொடர்பாக புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இவர்கள் காணாமல் போயிருக்கலாமென, நியுசிலாந்தின் ஊடகமொன்று நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தின் ஆவணங்களில் வெளியான தகவல்  

நியுசிலாந்தைச் சென்றடைவதற்கு முயற்சிகளை மேற்கொண்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் அந்த நாட்டு அரசாங்கத்தின் ஆவணங்களில் இலங்கையைச் சேர்ந்த 248 பேருடன் காணப்பட்ட மீன்பிடிப்படகை மீண்டும் காணவில்லையென குறிப்பிடப்பட்டுள்ளதாக, சர்வதேச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நியுசிலாந்துக்கு பயணமான 248 இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் | New Zealand 248 Migrants Bound Disappeared

2019ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் திகதி ஆட்கள் பயணிக்கும் படகாக மாற்றப்பட்ட 27 மீற்றர் ஆழ்கடல் மீன்பிடிப்படகு இந்தியாவிலிருந்து 248 தமிழர்களுடன் புறப்பட்டது.

அந்தப் படகு, அவுஸ்திரேலியா அல்லது நியுசிலாந்தை சென்றடைய முயற்சி செய்திருக்கலமென, நியுசிலாந்து அரச ஆவணங்கள் தெரிவித்துள்ளன. அதன் பின்னர், அந்தப் படகிலிருந்தவர்கள் தொடர்பாக எந்தத் தகவலும் இல்லையென, நியுசிலாந்தின் ஆவணங்கள் தெரிவித்துள்ளன.

248 இலங்கையர்கள் உயிரிழந்திருக்கலாமென அச்சம் 

இது தொடர்பான விசாரணைகளின் போது, கைது செய்யப்பட்ட பிரபு தண்டபாணி என்ற நபர், குறிப்பிட்ட படகு நியுசிலாந்துக்கே சென்று கொண்டிருந்ததாக, இந்தியப் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

பெருமளவு எண்ணிக்கையிலானவர்கள் நியுசிலாந்துக்குள் நுழைவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பான அந்த ஆவணங்களில், தமிழர்கள் கேரளாவிலிருந்து நியுசிலாந்து அல்லது அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு மேற்கொண்ட முயற்சி தொடர்பாக காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியுசிலாந்துக்கு பயணமான 248 இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் | New Zealand 248 Migrants Bound Disappeared

நியுசிலாந்துக்கு செல்ல முற்பட்ட இலங்கை அகதிகள் படகு தொடர்பாக டைம்ஸ் ஒவ் இந்தியாவில் வெளியாகியுள்ள கட்டுரையில், புதுடில்லியின் மதங்கீர் காலணியில் தங்கியிருந்த இலங்கைத் தமிழ் அகதிகளே இந்தப் படகில் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய - இலங்கை உடன்படிக்கை காரணமாக இந்தக் காலணி உருவானது. இந்த அகதிகள் மிக மோசமான நிலையில் வாழ்ந்ததாக இந்தக் கட் டுரையை எழுதிய கே.பி. சைகிரான் என்பவருக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தங்கள் பயணத்தை பாதுகாப்புத் தரப்பினர் கண்டுபிடிப்பதைத் தவிர்ப்பதற்காக 25 நாட்கள் நீடித்த படகுப் பயணத்தின் போது, அவர்கள் ஜி.பி.எஸ். சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்த்துள்ளனர்.

இந்தப் படகு நீரில் மூழ்கியிருக்க வேண்டும் அல்லது இலங்கை அதிகாரிகள் இவர்களை கைது செய்திருக்க வேண்டும். இதனால் அவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாமென, ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார். எவ்வாறிருப்பினும், அவர்கள் உயிரிழந்திருக்கலாமெனவும், அவர் தெரிவித்துள்ளார்.