கிண்ணியாவுக்கு புதிய காதி நீதிபதி நியமிப்பு!
கிண்ணியா பிரதேசத்துக்கு புதிய காதி நீதிபதியாக மெளலவி அப்துல் ஹஸன் முஹாஜிரீன் (நுழாரி) தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த 16ஆம் திகதி நீதிச் சேவை ஆணைக் குழுவினால் நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சை மூலம், தெரிவு செய்யப்பட்டு நியமன கடிதமும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நியமனம் குறித்து, ஊடகங்களுக்கு இன்று(19) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில், எனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை, சமூக அமைப்புக்களின் ஒத்துழைப்புக்ளுடனும், வழிகாட்டல்களுடனும் சிறப்பாக செய்வதற்கு ஆவலோடு இருக்கிறேன். இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
நீதிமன்ற சட்டதிட்டங்கள்
ஒரு சமூகப் பொறுப்பாக, எனக்கு வழங்கப்பட்ட இந்த கடமையினை கிண்ணியா உலமா சபை, கிண்ணியா மஜ்லிஸ் அஷ்ஷூரா சபை, பள்ளிவாசல்கள் சம்மேளனம், பள்ளி நிருவாகிகள் மற்றும் ஏனைய சமூக நிறுவனங்களின் ஒத்துழைப்புடனும் வழிகாட்டுதல்களோடும் சிறப்பாக செய்ய வேண்டும் என ஆவல் கொண்டுள்ளேன்.
எனவே, இதற்கு பொதுமக்கள் அனைவரும் எனக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையோடு சில விடயங்களை உங்களோடு, பகிர்ந்து கொள்கிறேன்.
காதி நீதிமன்ற சேவைகளை நாடி வரும் மக்கள் தங்களின் செயற்பாடுகளை காதிநீதிமன்ற காரியாலயத்துடன் மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், காதி நீதிமன்ற விடயமாக காதி நீதிபதியை அவரது வீட்டில் சந்திப்பதை முற்றாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
அத்தோடு, காதி நீதிபதியை ஏனைய பொது இடங்களில் சந்திக்க நேரும் பட்சத்தில் வழக்கு சம்பந்தமான விடயங்களை பேசுவதை முற்றாக தவிர்ந்து கொள்வதோடு, காதி நீதிமன்ற சேவையை நாடி வருபவர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின் பிரகாரம் தமது தேவைகளை நீதிமன்ற காரியாலயத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.
அதேவேளை, நீதிமன்ற செயற்பாடுகளுக்காக காதி நீதிமன்ற காரியாலயத்திற்கு வெளியே, நான் எவரையும் நியமிக்கவில்லை என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும், நீதிமன்ற செயற்பாடுகளை தமக்குச்சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கோடு எவருக்கும் அன்பளிப்புக்களை (பணமாகவோ, பொருளாகவோ) வழங்குவதை முழுமையாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
- ஒவ்வொரு திங்கட்கிழமையும் புதிய வழக்குகள் பதிவு செய்யப்படும் நாளாக ஒதுக்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் தலாக் வழக்குகள் தொடர்பான விடயங்கள் மேற் கொள்ளப்படும்.
- ஒவ்வொரு புதன்கிழமையும் பஸ்கு வழக்குகள் சம்பந்தமான விடயங்கள் மேற்கொள்ளப்படும்.
- ஒவ்வொரு வியாழக்கிழமையும் தாபரிப்பு வழக்குகள் மற்றும் வலி அனுமதிப் பத்திரம் சம்பந்தமான விடயங்கள் மேற் கொள்ளப்படும்.
- ஒவ்வொரு சனிக்கிழமையும் அழைப்பாணை விடுக்கப்பட்டவர்களின் வழக்குகள் மாத்திரம் இடம் பெறும்.
மேலும், விளம்பரப் பலகையில் வழக்கு இலக்கம் காட்சிப்படுத்தப்பட்டவர்கள் மாத்திரமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். (இதன் மூலம் வீணான சன நெருக்கடிகளை தவிர்த்துக் கொள்ள முடியும்.) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |