கிழக்கில் இருதய நோயளர்களின் நிலை! சபையில் வலியுறுத்திய ஹிஸ்புல்லாஹ்
கிழக்கு மாகாணத்திலுள்ள இருதய நோயாளர்களின் நிலையை எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எம்.பி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இருதய நோயாளர்கள் என்ஜியோகிராம் பரிசோதனை மேற்கொள்ள ஒரு வைத்தியசாலையில் கூட வசதி இல்லை. இவ்வாறான சோதனைகளை மேற்கொள்ள யாழ்ப்பாண வைத்தியசாலைக்கே செல்லவேண்டி இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(06) இடம்பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கிழக்கிலிருந்து வடக்கிற்கு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இது தொடர்பில் கவனம் செலுத்தி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இந்த வசதியை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் இருதய நோயாளர்கள் அதிகமாக காணப்படுகின்றனர். ஆனால் அவர்கள் அதுதொடர்பான பரிசோதனை செய்வதற்கு கிழக்கு மாகாணத்தில் அரச வைத்தியசாலைகள் எதிலும் அந்த வசதிகள் இல்லை.
கிழக்கில் இருக்கும் மிகப்பெரிய வைத்தியசாலையான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கூட அந்த வசதி இல்லை. கிழக்கு மாகாணத்தில் இருக்கும் இருதய நோயாளர்கள் இந்த பரிசோதனையை மேற்கொள்ள யாழ்ப்பாண வைத்தியசாலைக்கே அனுப்பப்படுகின்றனர்.
ஒரு மாதத்திற்கு 8பேருக்கு மருத்துவம்
இதனால் யாழ்ப்பாண வைத்தியசாலை ஒட்டுமொத்த வடக்கு கிழக்கு இருதய நோயாளர்களுக்கும் இந்த பரிசோதனையை மேற்கொள்ள இருப்பதால் ஒரு மாதத்துக்கு 8 பேருக்கே அவர்கள் பரிசோதனைக்கு அனுமதி வழங்குகிறார்கள்.
இதன்காரணமாக ஆயிரக்கணக்கான நோயாளர்கள் ஒன்றரை அல்லது இரண்டுவருடங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அதற்கிடையில் நூற்றுக்கணக்கான நோயாளர்கள் மரணித்து விடுகின்றனர்.
இதன் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் என்ஜியோகிராம் பரிசோதனையை மேற்கொள்ள முடியுமான வசதியை செய்துகொடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |