பெரும் மகிழ்ச்சியில் அம்பாறை கடற்றொழிலாளர்கள்! குவிந்து கிடக்கும் மீன்கள்
அம்பாறை மாவட்டத்தில் பருவ மழை காரணமாக அங்குள்ள ஆறு, குளம் ஆகியவற்றிலும் கடற்கரை பகுதிகளிலும் அதிகளவான மீன் இனங்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
தற்போது பெய்யும் மழை காரணமாக நன்னீர் மீன்கள் அதிகளவாக பிடிக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவ மழை
இம்மாவட்டத்தில் உள்ள கல்முனை கடற்கரை பள்ளிவாசல் பகுதி மற்றும் கிட்டங்கி வீதி, சொறிக்கல்முனை , சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை பகுதிகளில் வடிந்தோடும் வெள்ள நீரில் சிறு மீன் முதல் பெரிய மீன்கள் கட்டுவலை மற்றும் எறி வலை மூலம் பிடிக்கப்பட்டு அவ்விடத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.

இவ்வாறு அதிகமாக பிடிக்கப்படும் மீன்களை சமையலுக்காக அவ்விடத்தில் கடற்றொழிலாளர்களால் விற்கப்படுவதுடன் மக்கள் ஆர்வமாக கொள்வனவு செய்வதை காண முடிகிறது.
நன்னீர் மீன்பிடி
இதில் கோல்டன் செப்பலி, கணையான் ,கொய் கொடுவா, பொட்டியான், வெள்ளையாபொடி, இறால்,நண்டு வகைள் போன்ற மீன்கள் அதிகளவான விலையில் விற்பனை செய்யப்படுவதுடன் இதர மீன்கள் குறைந்த விலையில் விற்பனையாகின்றன.

இதனால் நன்னீர் மீன்பிடித்தொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் நல்ல வருமானம் ஈட்டக்கூடியதாக உள்ளதாக தெரிவித்தனர்.
இதே வேளை பாண்டிருப்பு, சாய்ந்தமருது, நற்பிட்டிமுனை, சம்மாந்துறை, கல்முனை , மீன் சந்தையில் மீன் விற்பனை சூடுபிடித்துள்ளதுடன் கடற்றொழிலாளர்கள் பிரதான வீதிகளில் தற்காலிகமாக மீன் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.







