மாடுகளை அறுப்பவர்களுக்கு அதிகபட்ச சட்ட நடவடிக்கை (PHOTOS)
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் உணவிற்காக மாடுகளை அறுப்பது தொடர்பில் கலந்துரையாடல் இன்று (2023.06.20) திகதி சுகாதார வைத்திய அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸ் தலைமையில் இக்கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில் எதிர்வரும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு உழ்ஹிய்யா வழங்குவதற்காக மாடுகளை அறுப்பது தொடர்பிலும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக சுகாதார வைத்திய அதிகாரிகள் தத்தமது பிரதேசங்களில் மாடுகளுக்கு ஏற்பட்டுள்ள நோய்ப்பரவலின் தன்மை மற்றும் ஏனைய சுகாதார நடைமுறைகளை கவனத்திற்கொண்டு பிரதேச உலமா சபை மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் பங்களிப்புடன் விசேட தீர்மானங்களை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பணிப்பாளரினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு மாறாக நோய்வாய்ப்பட்ட மாடுகளை அறுப்பவர்களுக்கு அதிகபட்ச சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


