யாழில் இனந்தெரியாதோரால் அறுக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல் கொடிகள்
கொடிகாமம் - பருத்தித்துறை வீதியில் இராணுவ முகாம் முன்பாக அமைந்துள்ள மாவீரர் நினைவேந்தல் இடத்தில் கட்டப்பட்டிருந்த மாவீரர் நினைவேந்தல் கொடிகள் இனந்தெரியாத நபர்களால் அறுக்கப்பட்டுள்ளது.
இனந்தெரியாத நபர்களால் நேற்று (22.11.2023) புதன்கிழமை இரவு அறுத்து எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் சாவகச்சேரிப் பிரதேசசபையின் முன்னாள் உப தவிசாளரான-ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த செ.மயூரன் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
நினைவுக் கொடி
மேலும் தெரிய வருகையில், முன்னாள் உப தவிசாளர் மயூரன் தலைமையிலான குழுவினர் புதன்கிழமை இரவு 8 மணி வரை நினைவேந்தல் இடத்தில் சிரமதானம் மேற்கொண்டு - நினைவுக் கொடிகளை கட்டி விட்டு சென்றிருந்த நிலையில் மேற்படி கொடிகள் அனைத்தும் இனந்தெரியாத நபர்களால் அறுத்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இருப்பினும் அவ்விடத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் கட்டப்பட்ட நினைவுக் கொடிகள் அறுத்து எறியப்படவில்லை.
எனவே இது தொடர்பாக பொலிஸார்
தகுந்த விசாரணை மேற்கொண்டு உண்மையைக் கண்டறிய வேண்டும் எனவும் முன்னாள் உப
தவிசாளர் மயூரன் தெரிவித்துள்ளார்.