யாழில் அடிகாயங்களுடன் மீட்கப்பட்ட ஆண் சடலம்: சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்
யாழ். - கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அடிகாயங்களுடன் மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஆறு பேரையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ். கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த சனிக்கிழமை (12.08.2023) நிர்வாண நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.
சிறுமியின் தாயாரும் நபர் மீது தாக்குதல்
09 வயதான சிறுமி ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதாகத் தெரிவித்தே, குறித்த நபர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சிறுமியின் தாயாரும் பெரிய தாயாரும் இணைந்து அந்த நபர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, சிறுமியின் மாமா உள்ளிட்ட நால்வர் இணைந்து அவரை வேறொரு
இடத்திற்கு அழைத்துச்சென்று தாக்கியுள்ளனர்.
பின்னர் குறித்த நபர் அவரது வீட்டிலேயே விடப்பட்ட போதிலும், மறுதினம் காலை அந்த குடும்பஸ்தர் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
விசேட குற்றதடுப்பு உதவிப் பொலிஸ் பரிசோதகர்
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்த யாழ்ப்பாணம் விசேட குற்றதடுப்பு உதவிப் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினரால் கோப்பாய் மற்றும் சிந்தங்கேணி பிரதேசங்களை சேர்ந்த 6 பேரை கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஆறு பேரையும் யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ. ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்திய போது 6 பேரையும் எதிர்வரும் 24ஆம் திதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன் சிறுமியை தந்தையுடன் செல்ல நீதாவன் உத்தரவிட்டார்.