கொக்கட்டிச்சோலையில் மின்சார கம்பியில் சிக்கி ஒருவர் பலி
மட்டக்களப்பு(Batticalao) கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பன்சேனை கிராமத்தில் மின்சார கம்பியில் சிக்குண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பன்சேனை, நல்லதண்ணிஓடை- அடச்சகல் சந்தி பகுதியிலுள்ள விவசாய காணி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் காட்டு யானை பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கியதில் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
குறித்த விபத்தில் உயிரிழந்தவர் முதலைக்குடாவில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான சோமசுந்தரம் சீராளசிங்கம் (வயது 39) எனும் குடும்பஸ்தர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணை
இன்று(03) அதிகாலை 2.00 மணியளவில் மூன்று விவசாயிகள் யானையை விரட்டுவதற்காக சென்று திரும்பி வரும் போது, விவசாயி ஒருவரினால் அங்குள்ள காணியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த யானை பாதுகாப்பு மின்சார கம்பியில் சிக்கியதில், ஸ்தலத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றுமொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. தொடர்ந்தும் இந்த சம்பவம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், அங்குள்ள கிராம உத்தியோகத்தரால் கடந்த மார்கழி மாதத்தில் ஒலிபெருக்கி மூலமும் கிராம கூட்டங்கள் ஊடாகவும், காட்டு யானை பாதுகாப்புக்காக சட்டவிரோத மின்சார வேலியினை அமைக்க வேண்டாம் என இந்த பகுதியிலுள்ள பொது மக்களுக்கு, அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |