மஹரகம கபூரிய்யா அரபுக் கல்லூரி விவகாரம்! ஜனாதிபதி தலையிட்டு தீர்வுகாண வேண்டும்

Sri Lanka
By Fathima Mar 23, 2023 11:40 PM GMT
Fathima

Fathima

மஹரகம கபூரிய்யா அரபுக் கல்லூரி எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலையிட்டு தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நிதியமைச்சு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மஹரகம கபூரிய்யா அரபுக் கல்லூரி விவகாரம்! ஜனாதிபதி தலையிட்டு தீர்வுகாண வேண்டும் | Maharagama Kapuriya Arabic College

90 வருடங்களுக்கும் அதிக பழைமைவாய்ந்த கல்லூரி

மஹரகம கபூரிய்யா அரபுக்கல்லூரி இந்நாட்டில் இருக்கும் அரபுக்கல்லூரிகளில் 90 வருடங்களுக்கும் அதிக பழைமைவாய்ந்த முன்னணியில் உள்ள கல்லூரியாகும்.

சுமார் 17 ஏக்கர் நிலப்பரப்பைக்கொண்ட இந்த கல்லூரி அண்மைக்காலமாக மிகவும் கவலைக்குரிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இந்த கல்லூரி என்.டீ.எச். அப்துல் கபூர் ஹாஜியார் என்ற தனவந்தரால், ஏழை மாணவர்கள் கல்வியைப் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் வழங்கப்பட்டதாகும்.

கபூரிய்யா அரபுக்கல்லூரிக்கு வருமானம் கிடைக்கும் வகையில், கொழும்பு கிரேண்பாஸில் சுலைமான் வைத்தியசாலை அமைக்கப்பட்டது. என்றாலும் தற்போது அந்த வைத்தியசாலை இல்லை. அந்த இடம் ஆயிரத்தி 180 மில்லியன் ரூபாவுக்கு 20 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

என்றாலும் இந்த பணம் கபூரிய்யா அரபுக்கல்லூரிக்கு செலவிடப்படாமல், என்.டீ.எச். அப்துல் கபூர் ஹாஜியாரின் மூன்று பரம்பரையினர் இந்த கல்லூரியின் விடயத்தில் முறையாக செயற்பட்டு வந்தபோதும் தற்போது 4ஆவது பரம்பரையில் வந்த ஒருவர் இந்த கல்லூரியை முற்றாக அழித்துவிடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.

மஹரகம கபூரிய்யா அரபுக் கல்லூரி விவகாரம்! ஜனாதிபதி தலையிட்டு தீர்வுகாண வேண்டும் | Maharagama Kapuriya Arabic College

ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்

இந்த நடவடிக்கைகள் தொடர்பாக மஹரகம பொலிஸ் நிலையத்தில் பல முறைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. என்றாலும் இந்த நபர் பொலிஸ் அதிகாரிகளையும் தன்பக்கம் வலைத்துக்கொண்டு, தற்போது கல்லூரியில் கல்வி கற்றுவரும் மாணவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.

நாட்டில் இவ்வாறு பல நூறு வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம் தனவந்தர்கள் வக்பு செய்துவந்த சொத்துக்களை, அவர்களின் பரம்பரையினர் அந்த சொத்துக்களை தங்கள் பக்கம் எடுத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

அதனால் இந்த நிலை தொடர்ந்தால் வக்பு செய்யப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் தங்களின் குடும்ப சொத்து என அபகரித்துக்கொள்ளும் நிலை எதிர்காலத்தில் ஏற்படும். அதனால் கபூரிய்யா கல்லூரி பிரச்சினையை ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தி, இதற்கு தீர்வொன்றை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.