பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

By Independent Writer Mar 23, 2023 02:13 PM GMT
Independent Writer

Independent Writer

மடு பிரதேசத்தில் சமூகம் சார்பாக பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெற்று வருகின்ற போதும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என மடு பிரதேச செயலாளர் கீ.பீட் நிஜாகரன் தெரிவித்தார்.

மடு பிரதேச செயலகத்தில் கிறிசலஸ் அமைப்பின் நிதி உதவியுடன் மன்னார் மாவட்ட குடி சார் அமைப்பின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்’ பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான சமூக பிரச்சினைகள் மற்றும் வன்முறைகளை தணிக்கும் நோக்கில் ஒரு வலுவான பொறிமுறையை ஏற்படுத்துவதன் மூலம் பெண்களை வலுவூட்டுதலும், அதனூடாக ‘சமூகத்தை அபிவிருத்தி செய்தலும் எனும் தொனிப்பொருளில்’ மன்னார் மாவட்ட பரிந்துரை முன்னெடுப்பு செயல்திட்டம் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் சட்டத்தரணிகளான கோசலை மதன்,திருமதி புராதணி புரந்தனன்,அருட்தந்தை பிலிப், கிறிசலஸ் அணித்தலைவர் ஜொஹான்சன் ஆகியோர் கலந்து கொண்டதோடு,பாடசாலை மாணவர்கள்,திணைக்கள அதிகாரிகள்,கிராம அலுவலகர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். கிறிசலஸ் நிறுவனத்தின் ஒரு திட்டமாக பெண்கள் சிறுவர்களுக்கு எதிராக நடை பெறுகின்ற வன்முறைகள் சம்மந்தமாக அவர்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகள் தொடர்பில் மடு பிரதேச செயலகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

மடு பிரதேசத்தில் சமூகம் சார்பாக பெண்கள் , சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் சிறிதளவில் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. குறித்த வன்முறைகள் குறித்து அரச அரச சார்பற்ற அமைப்புகளின் உத்தியோகத்தர்கள் திணைக்களங்களுடன் இணைந்து பெண்கள், சிறுவர்களுக்கு எதிராக வன்முறைகள் குறித்து பணியாற்றி வருகின்றனர்.

எனவே இவ்வாறான பிரச்சினைகளுக்கான தீர்வுகளாக சமூகத்தில் சட்டத்தை அமுல்படுத்தும் வேளையில் மக்கள் மத்தியில் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.

நாங்கள் இப்பிரதேசத்தில் பெண்கள் , சிறுவர்களுக்கு எதிராக பல்வேறு பினக்குகளை கையாண்டு வருகிறோம். எனவே இவ்வாறான வன்முறைகளை கட்டுப்படுத்த மக்கள் மத்தியில் இவ்வாறான விழிப்புணர்வுகளை கொண்டு செல்லப்படுவது அவசியம் என தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட இளைஞர்கள் தயாரிக்கப்பட்ட குறும்படம் காட்சிப்படுத்தப்பட்டது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் | Madu Divisional Secretariat