நீண்ட காலமாக இடம்பெற்ற ஒக்சிஜன் திருட்டு!

Sri Lanka
By Nafeel May 06, 2023 02:42 PM GMT

நீண்ட காலமாக பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் இருந்து ஒக்சிஜன் சிலிண்டர்களை திருடி விற்பனை செய்யும் பாரிய மோசடியில் ஈடுபட்டு வந்த வைத்தியசாலை ஊழியர் உட்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட நீண்ட விசாரணையின் பின்னர், இன்று (06) காலை 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

2020ஆம் ஆண்டு முதல் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இவர்கள் திருடிய ஒக்சிஜன் சிலிண்டர்களின் எண்ணிக்கை 210 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருடப்பட்ட ஒக்சிஜன் சிலிண்டரை பல்வேறு நபர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்தது பொலிசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.