இளவயது மரணங்கள் விட்டுச் செல்லும் இஸ்லாத்தின் படிப்பினைகள்
உஸ்தாத் ஹஸன் பரீத் பின்னூரி அவர்களது மகன் ஸஹல் அவர்களது விபத்து மரணம் தொடர்பான செய்திகளை சமூக ஊடகங்கள் வாயிலாக பார்க்க முடிந்தது.
அவர் பற்றி அவரது தந்தை சொன்ன விடயங்கள் எல்லா இளைஞர்களுக்கும் சிறந்த படிப்பினைகளாகும்.
அவர் ஜாமியாஹ் இஸ்லாமிய்யாஹ் ஆங்கில மொழிமூல இஸ்லாமிய கலாபீடத்தின் இரண்டாம் வருட மாணவன், தந்தையைப் போல் ஒரு ஆலிமாக தஃவாப் பணியாளராக ஆக ஆர்வம் கொண்டவர்.
தந்தையோடு மஸ்ஜிதுக்கு செல்பவர், அவரது தஃவாப் பணிகளில் துணையாக இருப்பவர், மஷுராக்களில் கலந்து கொள்பவர், அவரது பாதணிகளை கூட எடுத்து வைத்து சேவகம் செய்பவர்.
வீட்டில் தாய்க்கு உதவி ஒத்தாசை புரிபவர், வீட்டுக்கு தேவையான பொருட்களை பண்டங்களை கொள்வனவு செய்பவர், வீட்டை வீட்டு முன்றலை சுத்தம் செய்து விட்டு தானும் தயாராகி கலையகம் செல்பவர்.
நாற்பது நாள் ஜமாஅத் பணியில் செல்லவிருந்தாலும் தந்தையும் தஃவாப் பணியில் ஈடுபடுவதால் தாய்க்கு உதவி ஒத்தாசை செய்ய வேண்டுமென இருபது நாட்களில் வீடு வந்து ஓரிரு நாட்களே.
தாய்க்கு உதவி ஒத்தாசைகள் புரியும் போது நாளை பத்ரு யுத்தம் நிகழ்ந்த நாள் என்றும் ஒரு அறப்போர் நடப்பதை கனவில் கண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
நோன்பு துறந்த பின் தந்தை பயான் நிகழ்ச்சி ஒன்றிற்கு செல்வதற்காக அவரது பைக்கிற்கு பெற்றல் அடித்து வர தம்பியுடன் புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.
இனம் மதம் பாராது அண்டை அயலவர்களுடன் நல்லுறவு பேணுபவர், பாதையில் நடந்து செல்பவரை தனது பைக்கில் ஏற்றிச் சென்று விடுபவர்.
ஜமாஅத் பணியில் இருக்கும் பொழுது அனைவருக்கும் சேவகம் செய்வதில் ஆர்வம் காட்டியதாகவும் ஒரு வயதானவர் ஆடைகளைக் கூட தனது கரங்களால் கழுவிக் கொடுத்ததாகவும் ஜமாத்தின் அமீர் தெரிவித்துள்ளார்.
சகோதரனும் தான் வீட்டில் தராவீஹ் தொழுவிப்பதற்கு ஓதும் ஒரு ஸூராவை ஓதிய வண்ணம் அவருடன் பின் ஆசனத்தில் அமர்ந்து சென்றிருக்கிறார், சுவர்க்கம் நரகம் பற்றிய ஒரு வசனம் வந்த போது பைக்கை நிறுத்தி அதனை மீண்டும் ஓதக் கேட்டிருக்கிறார், சுவனத்தை பற்றி ஓதும் பொழுது விபத்து இடம் பெற்றிருக்கிறது, ஸ்தலத்திலேயே வபாஃத் ஆகி விட்டார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..! யா அல்லாஹ், அவர் நல்ல பிள்ளை என தாயும் தந்தையும் சாட்சி கூறுகிறோம், அண்டை அயலவர்கள் அறிந்தவர்கள் கூறுகிறார்கள், அவரை உன்னிடம் ஒப்படைத்து விட்டோம், அவரை நல்ல பிள்ளையாக அங்கீகரித்துக் கொள்வாயாக!
அவரது குற்றம் குறைகளை மன்னித்து அவரது நல்லமல்களை அங்கீகரித்து இந்த புனிதமான மாதத்தில் அவருக்கு உயரிய சுவன வாழ்வை வழங்குவாயாக!
அவர் முழுமையாக வாழ்ந்து தீனுக்காக உம்மத்துக்காக எதையெல்லாம் செய்ய வேண்டும் என நாம் கனவு கண்டோமோ அதை விடவும் அவரது இந்த மரணத்தின் மூலம் நல்ல விளைவுகளை படிப்பினைகளை நீ ஏற்படுத்துவாயாக, ஏனைய இளைஞர்கள் பிள்ளைகளையும் விளிப்புணர்வு பெறச் செய்து ஸாலிஹான நன்மக்களாக வாழச் செய்வாயாக!
இது அவரது தந்தையின் உருக்கமான கண்ணீருடன் கூடிய உரையில் இருந்து பெறப்பட்ட நஸீஹாக்கள். அந்த ஆத்மார்த்தமான துஆக்களை எல்லாம் வல்ல அல்லாஹ் அங்கீகரித்துக் கொள்வானாக, உஸ்தாத் ஹஸன் பரீத் அவரது துணைவி பிள்ளைகளுக்கு கழா கத்ரை பொருந்தி பொறுமைகாக்கும் சகிப்புத் தன்மையையும் அல்லாஹ்வின் அரவணைப்பில் மன நிம்மதியையும் ஆறுதலையும் எல்லாம் வல்ல அல்லாஹ் தருவானாக!
இந்தப் புனிதமிகு ரமழான் மாதத்தில் எமக்கும், எமது உம்மா வாப்பா உடன்பிறப்புகள், மனைவிமக்கள், உற்றார் உறவினர், அன்பிற்குரியவர்கள் ஆசான்கள் அனைவரது ஈருலக ஈடேற்றத்திற்கும் அல்லாஹ்வின் அருளையும் உங்கள் துஆக்களையும் ஆசித்தவனாக!
இனாமுல்லாஹ் மஸிஹுத்தீன்