EPF பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தொழிலாளர் துறையின் கணினி அமைப்பில் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், ஜூலை 30 மற்றும் 31 ஆகிய இரு தினங்களிலும் ஊழியர் சேமநிதி (EPF) தொடர்பான அனைத்து பொதுச் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக தொழிலாளர் துறை அறிவித்துள்ளது.
தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த பராமரிப்புப் பணிகளின் காரணமாக, தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து துணைப் பிரிவு தொழிலாளர் அலுவலகங்களில் வழங்கப்படும் ஊழியர் சேமநிதி (EPF) தரவு அமைப்பு மற்றும் டிஜிட்டல் EPF அமைப்பு சார்ந்த சேவைகள் இந்த இரு நாட்களிலும் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
EPF உதவித்தொகை வழங்குதல்
இதன் காரணமாக, EPF உதவித்தொகை வழங்குதல், உறுப்பினர் பதிவுகள் மற்றும் பிற EPF தொடர்பான பொதுச் சேவைகள் ஜூலை 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் வழங்கப்படமாட்டாது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த நாட்களில் சேவைகளைப் பெறுவதற்காக முன்கூட்டியே நேரம் ஒதுக்கியுள்ளவர்கள், அடுத்த ஒரு மாத காலத்திற்குள் ஏதேனும் ஒரு அலுவலக நாளில், தொழிலாளர் அலுவலகத்திற்குச் சென்று தேவையான சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.