கிண்ணியாவுக்கு பெருமை சேர்த்த கால்பந்து அணி முகாமையாளர்!
கிண்ணியா (Kinniya) பிரதேசத்திற்கும், நாட்டின் விளையாட்டுத் துறைக்கும் பெருமை சேர்க்கும் வகையில், கிண்ணியா உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் என்.ஜெ.முஹம்மட் ஆசிக், எதிர்வரும் செப்டம்பர் மாதம் புது தில்லியில் நடைபெறவுள்ள 2025 சுப்ரதோ கோப்பை சர்வதேச கால்பந்து போட்டியில் (Subroto Cup International Tournament 2025) இலங்கை பாடசாலை U-17 சிறுவர் கால்பந்து அணியின் முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை பாடசாலை கால்பந்து அணியின் இந்த நியமனம், மொஹமட் ஆஷிக் நீண்டகால அர்ப்பணிப்பு, விளையாட்டு துறைக்கான அவரது கடின உழைப்பு மற்றும் தலைமைத்துவத்துக்கு கிடைத்த ஒரு சர்வதேச அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
இவருடைய இந்த நியமனம், இவருடைய கல்லூரியையும், கிண்ணியா பிரதேசத்தையும், ஒட்டுமொத்த இலங்கையையும் உலக அரங்கில் பெருமைப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெருமைப்படுத்தும் செயல்
சாதனைகள் மூலம் பேசும் ஒரு பயணம் கடந்த பல ஆண்டுகளாக மொஹமட் ஆஷிக் தனது கல்லூரியில் மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்துவதில் தன்னலமற்ற சேவையை ஆற்றி வருகிறார்.
அவருடைய வழிகாட்டுதலில் கல்லூரி மாணவர்கள் பல தேசிய மற்றும் மாகாண மட்டப்போட்டிகளில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றுள்ளனர்.
அவற்றில் சில: 2020, 2022, 2023 – அகில இலங்கை U-14 கால்பந்து போட்டிகளில் வெற்றி, 2022 – அகில இலங்கை U-20 கிரிக்கெட் போட்டியில் சாம்பியன், 2024, 2025 – மாகாண மட்ட U-16 கால்பந்து போட்டிகளில் சாம்பியன்.
இவை தவிர, 10-க்கும் மேற்பட்ட சர்வதேச வீரர்களை உருவாக்கிய பெருமையும் இவருக்கு உண்டு.
வாழ்த்துக்கள்
இவருடைய உழைப்பும் அர்ப்பணிப்பும் இளம் வீரர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கிறது. கிண்ணியா கல்லூரி முதல்வர் சட்டத்தரணி எம்.எச்.எம்.நஜாத், "மொஹமட் ஆஷிக்கின் அயராத உழைப்பு, தன்னலமற்ற சேவை மற்றும் அர்ப்பணிப்பு என்பன, இளம் வீரர்களுக்கு ஓர் உத்வேகமாக அமைந்துள்ளன" எனத் தெரிவித்தார்.
மேலும், அவருடைய இந்த சர்வதேசப் பயணம் வெற்றியடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்.
கிண்ணியாவின் மண்ணிலிருந்து சர்வதேச அரங்குக்குச் செல்லும் என்.ஜே.மொகமட் ஆஷிக்கின் பயணம் வெற்றிகரமாக அமைய கிண்ணியா மக்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |