ஊடகவியாளரின் மரணத்தில் மர்மம் : மனைவி விசனம்
திருகோணமலை – கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியாளர் பிரியான் மலிங்க (வயது 34) மரணமடைந்ததற்கான பின்னணி குறித்து தற்போது சந்தேகங்கள் எழுந்துள்ளன.
லிலாரத்ன மாவத்தை பகுதியைச் சேர்ந்த இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார் .
கடந்த மே மாதம் 17ஆம் திகதி இரத்தினபுரியில் உள்ள மனைவியின் வீட்டிலிருந்து கந்தளாய் நோக்கிச் சென்றபோது, ஹபரன கல்வங்குவ என்ற இடத்தில் அதிகாலை 1.40 மணியளவில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதாக ஹபரன பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணையில் அலட்சிய தன்மை
இன்று வரை 23 நாட்கள் கடந்தும் சம்பந்தப்பட்ட விபத்துக்கான விசாரணையில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை என்று அவரது மனைவி கடும் வருத்தத்துடன் விசனம் வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நான் பல இடங்களில் இருந்து CCTV காட்சிகள் பெற்று ஹபரன பொலிஸாரிடம் வழங்கியிருந்தும் அவர்கள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது ஒரு அலட்சியமான அணுகுமுறையாகவே இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
பிரியான் மலிங்க ஒரு கடமை உணர்வுள்ள ஊடகவியாளராக பல சமூக பிரச்சனைகளுக்கு குரலாக இருந்தவர் எனவும், அவரது மரணம் குறித்து முழுமையான மற்றும் நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவரது மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |