யாழ்.சந்தைகளில் 10 வீத கழிவு பெற தடை: மீறுபவர்களுக்கு எதிராக உத்தரவு
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் நடைமுறையில் உள்ள 10 வீத கழிவு நடைமுறையினை உடனடியாக நிறுத்தி குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு விவசாய அமைச்சர் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று(15.10.2023) இடம்பெற்ற மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் கருத்து தெரிவிக்கையில்,
பொதுவான தீர்மானம்
“யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சில சந்தைகளில் விவசாயிகளிடமிருந்து 10 வீத கழிவு அறவிடும் நடைமுறை செயற்படுத்தப்படுகின்றது .
குறிப்பாக திருநெல்வேலி, மருதனார் மடம், சாவகச்சேரி, கொடிகாமம் சந்தைகளில் இந்த விவசாயிகளிடம் கழிவு அறவிடும் நடைமுறை இடம்பெற்று வருகின்றது.
குறித்த சந்தைகளில் விவசாயிகள் அச்சுறுத்தப்பட்டு அவர்களிடம் இந்த கழிவு அறவிடப்படுகின்றது. இந்நிலையில், விவசாயிகள் இது தொடர்பில் முறைபாட்டினை பதிவு செய்வதில் தயக்கம் காட்டுவார்கள் என நம்பப்படுகிறது.
மேலும், பொதுவான தீர்மானமாக அல்லது, பொதுவான முறைப்பாட்டுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றார்கள். இந்த விடயம்தொடர்பில் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ள போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கழிவு அறவிடும் நடைமுறை
இதனையடுத்து, பொலிஸார் குறித்த செயற்பாட்டை தடுத்து நிறுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த கூட்டத்தின் தீர்மானமாக 10வீத கழிவு அறவிடும் நடைமுறையினை நிறுத்த கோரிய முறைப்பாட்டினை அவரிடம் முன்வைத்திருந்தோம்.
இந்நிலையில், உடனடியாக தடுத்து நிறுத்துவதோடு குறித்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறும் உத்தரவிட்டார்.
மேலும், குறித்த சம்பவத்தினை பொலிஸாரால் மாத்திரம் தடுத்து நிறுத்த முடியாது. இதற்கு பிரதேச செயலர்கள், கிராம சேவகர்கள் மற்றும் பிரதேச சபை அதிகரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கழிவு நடைமுறை தொடர்பிலான சகல தகவல்களையும் பொலிஸாருக்கு வழங்கினால் அதனை கட்டுப்படுத்தி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கு இலகுவாக இருக்கும்” என்றார்.
மேலும் எதிர்வரும் காலங்களில் பிரதேச சபைகள் சந்தைகளை குத்தகைக்கு
கொடுக்கும்போது இந்த கழிவு நடைமுறை நடைமுறைப்படுத்த கூடாது என்ற நிபந்தனையும்
பின்பற்றிய வழங்க வேண்டும் எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.