1.4 கோடி ஈரானியர்கள் உயிர்த்தியாகம் செய்ய தயார்...! ஜனாதிபதி மசூத் பெசெஸ்கியன் ஆவேசம்
தன்னையும் சேர்த்து 14 மில்லியன் ஈரானியர்கள் போரில் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்ய முன்வந்துள்ளதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஸ்கியன் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் ஈரானின் மின் நிலையங்கள் மீதும் பாலங்கள் மீதும் தாக்குதல் நடத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில் இன்றுடன் அக் காலக்கெடு நிறைவடைகிறது.
எந்த ஒப்பந்தமும் எட்டப்படாவிட்டால் ஈரான் முழு நாடும் அழிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இவ்வாறான பின்னணியில், 14 மில்லியனுக்கும் அதிகமான ஈரானிய மக்கள் இந்த தன்னலமற்ற போராட்டத்தில் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்யத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர்.
நானும் ஈரானுக்காக என் உயிரைக் கொடுக்கத் தயாராக இருந்தேன் இருக்கிறேன் இனியும் தயாராகவே இருப்பேன் என்றார்.
இதேவேளை, டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள போர் எச்சரிக்கைகள் வெறும் மாயை (Delusional) என ஈரானின் உயர்மட்ட கூட்டு இராணுவ கட்டளைப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அல்-அன்பியா (Khatam al-Anbiya) மத்திய தலைமையகத்தின் ஊடகப் பேச்சாளர் இது குறித்து விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியின் இந்த அச்சுறுத்தல்கள், பிராந்தியத்தில் அமெரிக்கா சந்தித்துள்ள அவமானம் மற்றும் இழிவை ஈடுசெய்யப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.