புனித ரமழான் காலத்தில் மாணவர்களை மையப்படுத்தி உளவளத்துணை செயலமர்வு
மாணவர்களின் கற்றல் நடவடிக்கையினை மேம்படுத்தும் பொருட்டு பாடசாலை, மத்ரஸா மாணவர்களை மையப்படுத்திய உளவியல் செயலமர்வு அட்டாளைச்சேனை ஜம்இய்யா வளாகத்தில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வு அட்டாளைச்சேனை ஜம்இய்யாவின் தலைவர் அஷ்ஷேஹ்எம்.ஏ.முபீன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
கற்றல் நடவடிக்கை மந்த நிலையில்
இந்நிகழ்வில் உளவியலாளரும், இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவன பணிப்பாளருமான ஆதில் ஹசன் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றியிருந்தார்.
அவர் உரையாற்றுகையில்,தற்போதுள்ள சூழலில் மாணவர்களின் கற்றல் நடவடிக்கை மந்த நிலையிலே காணப்படுகின்றது.
அத்துடன், ஆன்மிகத்துறையில் நாட்டமின்மை மாணவர்களை வெகுவாக தொற்றிக்கொள்ளத் தொடங்கியுள்ளது.
இதனால் சமூகவலைத்தளங்கள், இணைய விளையாட்டுகளில் அதிகம் ஈடுபாடு செலுத்தி கற்றல் நடவடிக்கையில் பின்தள்ளப்படுகின்ற நிலை மேலோங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் மூழ்குதல்
இணைய விளையாட்டுக்கள், சமூக வலைத்தளங்களில் மூழ்குதல் போன்ற செயற்பாடுகளில் இருந்து மாணவர்களை மீட்டெடுக்க வேண்டும் என்கின்ற கோரிக்கை பாடசாலை, சமூக ஆர்வலர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வந்த நிலையிலே ஜம்இய்யா குறித்த விடயத்தில் கவனம் செலுத்தி இந்தச் செயலமர்வுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்குறித்த செயலமர்வில் பெருமளவான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன் பெற்றோரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.