புனித ஹஜ் யாத்திரை வீசாக்கள் விற்பனை தொடர்பில் வெளியான அறிவிப்பு
புனித மக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்காக வழங்கப்படும் விசாக்கள் கடந்த வருடங்களைப் போன்று விற்பனை செய்ய இடமளிக்கப்படமாட்டாதென்று, புத்தசாசன கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள முஸ்லிம் சமய விவகாரத் திணைக்களத்தில் முதன்முறையாக ஹஜ் விடயங்களை கவனிப்பதற்காக தனியானதொரு ஹஜ் விவகார அலுவலகமொன்று அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மோசடிகளை தடுப்பதற்கு அலுவலகம்
மேலும் கூறுகையில்,"கடந்த காலங்களில் இலங்கைக்கு கிடைக்கும் விசாக்கள் பல இலட்சங்களுக்கு விற்பனை செய்யப்பட்டன. அவ்வாறான மோசடிகளை தடுப்பதற்காகவே இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முரணாக யாரேனும் செயற்படுவார்களாயின் உடனடியாக அமைச்சுக்கு அறிவிக்கவும்.
அத்துடன், ஹஜ் யாத்திரைக்காக செல்லும் முஸ்லிம்களுக்கு நியாயமான சேவைகளை வழங்குவதே தனது நோக்கம்.
இம்முறை இலங்கை முஸ்லிம்களுக்காக 3,500 விசாக்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.”என தெரிவித்துள்ளார்.