அக்குறனை குண்டுப் புரளி விவகாரத்தில் கைதான நபர், நேற்று பிணையில் விடுதலை.
அக்குறனை பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்படக்கூடும் என போலியான தகவலை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மௌலவி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதன்படி, சந்தேகநபர் 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின்கீழ் இயங்கும், 118 என்ற துரித அழைப்பு இலக்கத்திற்கு, அண்மையில் அழைப்பை ஏற்படுத்திய இஸ்திக் மொஹமட் என்ற 21 வயதான குறித்த மௌலவி, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் நான்காம் ஆண்டு நினைவு நாளில், ஏழு கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக தமக்கு கிடைத்த தகவலை வழங்கியுள்ளார்.
இதையடுத்து, ஹரிஸ்பத்துவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்த அவர், நேற்று வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.