இன்னும் அசமந்த நிலையிலேயே கிழக்கு மாகாண சபை பயணிக்கிறது - இம்ரான் எம்.பி குற்றச்சாட்டு
இந்த அரசாங்க காலத்திலும் பொதுமக்களுக்கு சேவை வழங்குவதில் கிழக்கு மாகாண சபை அசமந்த நிலையிலேயே பயணித்து வருகின்றது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று(03) கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
கிழக்கு மாகாண சபை அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு பொதுமக்களால் அனுப்பப்படும் கடிதங்களில் பெரும்பாலானவற்றுக்கு பதில் அனுப்பப்படுவதில்லை.
தாமதப்படுத்தப்படும் பதில்கள்
அவற்றுக்கான நடவடிக்கைகளும் கூட வாரக்கணக்கில், மாதக்கணக்கில் எனத் தாமதப்படுத்தப்படுகின்றன. சில விடயங்கள் எவ்வித நடவடிக்கையுமின்றி கிடப்பில் போடப்படுகின்றன.
கடந்த அரசாங்க காலத்தில் கிழக்கு மாகாணசபை எப்படி செயற்பட்டதோ அதே பாணியிலேயே இன்றும் பயணிக்கிறது.
இந்த அரசாங்கம் அரச சேவையை வினைத்திறனுள்ளதாக்குவோம், பொதுமக்களுக்கு பயனுள்ளதாக்குவோம் என்று பேசிக் கொண்டாலும் எந்த மாற்றத்தையும் கிழக்கு மாகாண சபையில் அவதானிக்க முடியவில்லை.
மக்கள் பிரதிநிதியாகிய நான் கிழக்கு மாகாணசபை அமைச்சுக்கள் திணைக்களங்களுக்கு பொது மக்களது பிரச்சினைகள் தொடர்பாக கடிதங்கள் அனுப்பியுள்ளேன். சில அலுவலகங்களுக்கு நேரில் சென்று விளக்கமளித்து கடிதங்கள் கையளித்துள்ளேன்.
எனது கடிதங்களுக்கே பதில் கிடைப்பதில்லை. அப்படியாயின் பொதுமக்கள் அனுப்பும் கடிதங்களின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.
நடவடிக்கைகள்
இதைவிட ஆச்சரியம் என்னவென்றால் கிழக்கு மாகாண ஆளுநருக்கு பொதுமக்கள் முன்வைக்கும் பிரச்சினைகளை அவர் சம்பந்தப்பட்ட அமைச்சு திணைக்களங்களுக்கு நடவடிக்கைக்காக அனுப்புகிறார், அவை கூட கிடப்பில் போடப்படுகின்றன.
நான் ஆளுநரது கவனத்திற்கு சில விடயங்களை முன்வைத்தேன். அவர் குறித்த அமைச்சுக்கள் திணைக்களங்களுக்கு அவற்றை முன்னிலைப்படுத்தி தேவையான நடவடிக்கை எடுத்து இருவாரங்களுக்குள் பதில் அனுப்புமாறு குறிப்பிட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதன் பிரதி எனக்கும் கிடைத்தது. சுமார் 2 மாதங்களாகியும் அவற்றுக்கான பதில் எனக்கு கிடைக்கவில்லை.
உரிய விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுத்ததாகவும் தெரியவில்லை. ஆளுநரது கடிதத்தையே இந்த அதிகாரிகள் கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கிழக்கு மாகாண அரச அலுவலகங்களின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது என குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், இது குறித்து நான் மிகவும் கவலையடைகின்றேன் என விசனம் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |