கிண்ணியா வைத்தியசாலை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு- இம்ரான் மகரூப்
கிண்ணியா பிரதேச ஆயுர்வேத வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
சமீபத்தில் சுகாதார அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு செயலாளர் ஜே.ஜே.முரளிதரன், சுதேச வைத்திய திணைக்கள ஆணையாளர் எஸ்.சிறிதர் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இக்கலந்துரையாடலின் போது நடுத்தீவு வைத்தியசாலையின் ஆளணி பற்றாக்குறை தொடர்பாக பரிசீலிக்கப்பட்டது.
வைத்தியசாலையில் ஆளணி பற்றாக்குறை
இந்த வைத்தியசாலை சிகிச்சை பிரிவுகளை உள்ளடக்கிய மாவட்ட வைத்தியசாலையாக இருந்த போதிலும் அதற்குத் தேவையான வைத்தியர்கள் மற்றும் ஏனைய ஆளணி இல்லை.
இதனால் நோயாளிகள் முழுமையான சேவைகளைப் பெற்றுகொள்வதில் சிரமங்களை எதிர்நோக்குவதாக இம்ரான் எம்.பி இதன்போது சுட்டிக்காட்டினார்.
இவ்வைத்தியசாலை மாவட்ட வைத்தியசாலை என திறந்து வைக்கப்பட்டாலும் இதற்குரிய ஆளணி சாதாரண வைத்தியசாலைக்குரியதாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
விரைவில் தீர்வு வழங்க உறுதிமொழி
ஆளணி அங்கீகாரமின்றியே இது மாவட்ட வைத்தியசாலையாகத் திறக்கப்பட்டுள்ளது. இதனாலேயே வைத்தியசாலைக்குரிய ஆளணியை வழங்க முடியாதுள்ளதாகவும் இது குறித்து ஆளணி ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் செயலாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆளணி ஆணைக்குழுவோடு பேசி புதிய ஆளணி அங்கீகாரத்தை விரைவுபடுத்த தான் நடவடிக்கை எடுப்பதாகவும், அதற்குத் தேவையான தகவல்களைத் தருமாறும் இதன்போது இம்ரான் எம்.பி தெரிவித்துள்ளார்.
மேலும் நடுத்தீவு மற்றும் சூரங்கல் வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடு இருப்பதை சுதேச வைத்திய திணைக்கள ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு வந்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.