வங்கி கட்டமைப்பு முழுமையாக பாதிக்கும் அபாயம்
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை சட்டமாக்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளமை அவதானத்திற்குரியது என சுயாதீன எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா நாவல பகுதியில் நேற்றைய தினம் (06.04.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை சட்டமாக்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளமை அவதானத்திற்குரியது.
பொருளாதார மீட்சிக்கான எந்த திட்டங்களும் இல்லாமல் சர்வதேச நாணய நிதியத்தை நாடியுள்ளதால் நாணய நிதியம் முன்வைக்கும் கடுமையான நிபந்தனைகளை செயற்படுத்துவதை தவிர வேறு வழியில்லை.
மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் திறைசேரியின் செயலாளர் ஆகியோர் கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி சர்வதேச ஊடகத்திற்கு நாட்டின் பொருளாதார மீட்சி தொடர்பில் முக்கிய விடயங்களை குறிப்பிட்டுள்ளார்கள்.
இலங்கை எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு (2024, 2025, 2026, 2027, 2028) 21.9 பில்லியன் டொலர் அரச முறை கடனை மீள் செலுத்த வேண்டும்.
பிரதான நிலை கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு கடன் தவணை காலத்தை மட்டுப்படுத்திக் கொள்ள அல்லது கடன் தொகையை குறைத்துக் கொள்ள தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள்.