அமெரிக்க கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் : ஹவுத்திகள் வெளியிட்ட எச்சரிக்கை
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில், அமெரிக்காவின் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஹவுதி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா இன்று (22.06.2025) அதிகாலை தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் என மூன்று அணுசக்தி தளங்களை அமெரிக்கா தாக்கியுள்ளது.
தாக்குதல் முழு வெற்றியை கொடுத்திருக்கிறது என்றும், அணு சக்தி மையங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன எனவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஹவுதிக்களின் எச்சரிக்கை
ஆனால், இஸ்ரேல் இதனை மறுத்திருக்கிறது. ஃபோர்டோ அணுசக்தி மையத்தில் பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு நாங்கள் தாமதமின்றி உடனடியான பதிலடியை கொடுப்போம் என ஈரான் எச்சரித்திருக்கிறது. குறிப்பாக அமெரிக்க கப்பல்கள் மீது தங்களது தாக்குதல் இருக்கும் எனவும் கூறியிருக்கிறது.
இந்த நிலையில், இஸ்ரேலுடனான போரில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்கு, ஹவுதி அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, செங்கடல் வழியே செல்லும் அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகளின் போர் மற்றும் சரக்குக் கப்பல்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என்று ஹவுதி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகின் வணிகக் கப்பல் போக்குவரத்தானது, செங்கடலில்தான் 40 சதவிகிதம்வரையில் நடைபெறுகிறது. செங்கடல் வழியான கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டால், அதன் விளைவு உலகச் சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |