ஹிஜாப்பை அகற்ற பெண்களை ஊக்குவிப்பவர்களுக்கு வழக்குப்பதிவு - வெளியான பரபரப்பு உத்தரவு
டெஹ்ரான், ஈரான் நாட்டில் ஹிஜாப்பை அகற்ற பெண்களை ஊக்குவிக்கும் நபர்கள் மீது பிணையில் வெளிவர முடியாதபடி வழக்கு பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெஹ்ரான், ஈரான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிவது தொடர்பாக கடுமையான சட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று மாஷா அமினி (வயது 22) என்ற இளம்பெண்ணை பொலிஸார் தாக்கியதில் அவர் உயிரிழந்திருந்தார்.
இந்த சம்பவத்தை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்ததுடன், போராட்டத்தைக் கட்டுப்படுத்த ஈரான் அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளது.
இதையடுத்து பெண்கள் 'ஹிஜாப்' அணிவதைக் கண்காணிக்க, பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் மீறுபவர்களிடம் அதிகாரிகள் அபராதம் வசூலித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது ஹிஜாப்பை அகற்ற பெண்களை ஊக்குவிக்கும் நபர்கள் மீது வழக்கு தொடரப்படும் என ஈரானின் துணை அட்டர்னி ஜெனரல் எச்சரித்துள்ளார்.
பொது இடங்களில் ஹிஜாப் இன்றி வெளியே வரும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பெண் பிரபலங்கள் பலரும் ஹிஜாப் இன்றி இணையத்தில் தங்கள் புகைப்படங்களைப் பதிவேற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் ஹிஜாப் அணியாததை ஊக்குவிப்பவர்கள் மீது பிணையில் வெளிவர முடியாதபடி வழக்கு பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.