இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா அமைப்பினர்
லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய தாக்குதல்களில் ஏழு இஸ்ரேலிய வீரர்கள் உள்ளிட்ட 17 பேர் காயமடைந்ததாக இஸ்ரேலின் இராணுவம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஹமாஸ் அமைப்பிற்கும், இஸ்ரேலிய இராணுவத்திற்கும் இடையே மோதல்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், தற்போது லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையிலான எல்லையிலும் மோதல்கள் தொடங்கியுள்ளன.
இது மற்றொரு போரினை மத்திய கிழக்கு பகுதிகளில் ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீண்ட நாட்களுக்கு பிறகு லெபனான் மற்றும் இஸ்ரேல் எல்லையில் நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இது என கூறப்படுகிறது.
தயார்நிலையில் இராணுவம்
இஸ்ரேல் இராணுவத்தின் தலைமை செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறுகையில், “இஸ்ரேல் பொதுமக்கள் மீது ஹிஸ்புல்லா அமைப்பு நடத்திய தாக்குதல் மிகவும் தீவிரமானது.
காஸாவில் நடந்துவரும் போரில் இஸ்ரேல் அரசு கவனம் செலுத்தி வரும் அதேசமயம் வடக்கிலும் இராணுவத்தை தயார்நிலையில் வைத்துள்ளது.
ஒரு மணி நேரத்திற்குள் 15 ஏவுகணைகளை ஏவப்பட்டதாகவும், அவற்றில் நான்கு ஏவுகணைகளை இஸ்ரேல் இராணுவம் தாக்கி அழித்ததாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த 7 பேர் இராணுவ வீரர்கள் என்று கூறிய நிலையில் மீதமுள்ள 10 பேர் குறித்த விவரங்களை கூற இஸ்ரேல் மீட்பு படை மறுத்துவிட்டது. ஆனால், அதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்துள்ளது.