வடக்கு கிழக்கிற்கு விசேட நிதி ஒதுக்கீடு வழங்கப்படும்: காதர் மஸ்தான் தெரிவிப்பு(Photos)
எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் வடக்கு கிழக்கிற்கு விசேட நிதியொதுக்கீடுகளை செய்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (14.06.2023) விவசாய அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயும் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் பிரச்சினை
இதேவேளை மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் விவசாய அமைச்சினால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மாவட்ட ரீதியாக ஆராயப்பட்டது.
அறுவடையின் பின்னர் நெல் கொள்வனவினை விவசாயிகளுக்கு ஏற்ற தொகையில் நெல் கொள்வனவு மேற்கொள்ளுதல்,விவசாயிகளுக்கான நீர்பாய்ச்சல் குளங்களை புனரமைத்தல், உரத்தினை உரிய திகதிகளில் பெற்றுக்கொள்ளல், விவசாயிகளுக்கான காப்புறுதிகளை பெற்றுக்கொள்ளல், விவசாயிகள் விதைப்பு காலத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டது.
தீர்வுகளைப்பெற்றுக்கொடுக்க நடவடிக்கை
இதன்போது விவசாயிகளினால் முன்வைக்கப்பட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டதுடன் அவற்றினை இன்று விவசாய அமைச்சர் தலைமையில் நடைபெறும் விசேட கூட்டத்தில் முன்வைத்து தீர்வுகளைப்பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா,திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள்,பிரதேச செயலாளர்கள்,விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.