டெங்கு நோயிலிருந்து மக்களை பாதுகாக்க களச் செயற்பாடும் புகை விசிறல் நடவடிக்கையும் !

Sri Lanka Kalmunai National Health Service
By Nafeel Apr 13, 2023 01:40 PM GMT
Nafeel

Nafeel

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ எல் எம் றிபாஸ் அவர்களின் வழிகாட்டலுக்கும் ஆலோசனைக்கும் அமைவாக காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா வஸீரின் பணிப்புரைக்கமைய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் பைசல் முஸ்தபா தலைமையில் டெங்கு நோயிலிருந்து மக்களை பாதுகாக்க களச் செயற்பாடுகளும் புகை விசிறல் நடவடிக்கையும் இன்று (13) காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டது.

அண்மைக்காலமாக டெங்கு நுளம்பின் ஆதிக்கம் சமிக்கை காட்டி வருகின்றதை அவதானிக்க கூடியதாக இருப்பதனால் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக டெங்கு கட்டுப்பாட்டு கள ஊழியர்களால் நாளாந்தம் களச் செயற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக கல்முனை மாநகர சபை புகை விசிறல் இயந்திரங்களின் உதவியுடன் டெங்கை கட்டுப்படுத்தும் முகமாக அதனை பரப்பும் முதிர்ந்த நுளம்புகளை அழிக்கும் புகை விசுறும் (Fogging) விசேட நடவடிக்கைகள் பொதுச்சுகாதார பரிசோதர்களான கலந்தர்ஷா ஜெமீல், எம்.எம். முஹம்மட் சப்னூஸ், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்களின் பங்கெடுப்புடன் மேற்கொள்ளப்பட்டது.

ஆட்கொள்ளியான டெங்கு நோய் ஊடுருவி நம்மை வந்தடைந்து மரண அச்சுறுத்தலை வழங்குவதுடன் குழந்தைகளையும், சிறுவர்களையும், மாணவர்களையும் மிகவும் அதிகமாக பாதித்து டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு உயிராபத்தை உண்டாக்கிவிடும் அபாயம் நிலவுகிறது.

ஆகவே சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறும் நீர் தேங்கி நின்று அதனில் நுளம்புகள் உருவாவதற்கு ஏதுவான பொருட்களையும் இடங்களையும் இல்லாதொழிக்குமாறும் சுகாதாரத்துறை மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.