நோன்பாளிகளுக்கு சுகாதாரமான உணவுகளை வழங்காத உணவங்கள் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானம்
புனித நோன்புக்காலத்தில் தரமற்ற உணவுகளை பொதுமக்களின் பாவனைக்கு வழங்குபவர்கள் மீது ட்ட நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்சத் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
இன்று (27.03.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், புனித நோன்புக்காலத்தில் அதிகமான மக்கள் தமது இப்தாருக்கு தேவையான உணவுகளையும், சிலர் தமது ஸஹர் நேரத்திற்கு தேவையான உணவுகளையும் கடைகளிலையே வாங்குகிறார்கள்.
சட்ட நடவடிக்கை
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதாரத்துறையினரிடம் பொதுமக்கள் முன்வைக்கும் முறைப்பாடுகளை அடுத்து துப்பரவில்லாத, முறையான சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத, பாவனைக்கு உகந்ததல்லாத உணவுகளை விற்போர் மீதும் அந்த உணவகங்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளோம்.
சுகாதாரத்தையும் தாண்டி இறைவனுக்கு பயந்து நோன்பாளிகள் சாப்பிடும் உணவுகளை தரமானதாக வழங்கவேண்டியது ஒவ்வொரு உணவகங்களினதும் கடமையாகும்.
நோன்பு நாட்கள்
நீண்டநேரம் நோன்புநோற்று நோன்பை துறக்கும் நேரத்தில் தரமில்லாத உணவுகளை உட்கொள்வதன் மூலம் பல்வேறு தர்மசங்கடங்களை அந்த நோன்பாளிகள் சந்திக்க நேரிடும்.
அதிகநன்மைகளை சேகரிக்க வேண்டிய இந்த மாதத்தில் நியாயமான விலைகளில் சுத்தமாகவும், சுகாதாரமுறையிலும் தயாரித்த உணவுகளை மக்களுக்கு வழங்க உணவகங்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.