தனியாரிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய அரசு ஒப்புதல்
தனியார் துறையிடம் இருந்து ஆறு மாதங்களுக்கு அவசரகால மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான, முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு அமையவே இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு நாளைக்கு சுமார் 100 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றது.
அடுத்த மாதம் முதல் மின்சார கொள்வனவு ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மின்சாரம் வழங்கக் கேள்விப்பத்திரமும் கோரப்பட்டுள்ளது.
நுரைச்சோலை அனல்மின் நிலையம்
எனினும் நீர்மின் உற்பத்தித் திறனில் ஏற்பட்ட வீழ்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்த தேவை அதிகரிக்கும் என்றும், நாளொன்றுக்கு 150 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்வனவு செய்ய வேண்டியிருக்கும் என்றும் இலங்கை மின்சார சபை தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
நீர் மின் உற்பத்தியில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சி மற்றும் நுரைச்சோலை அனல்மின் நிலைய அலகு ஒன்று செயலிழந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வறட்சியினால் பயிர்கள் நாசமடைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பில் அடுத்த வாரம் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி ஒரு ஏக்கருக்கு 40,000 ரூபாயும், ஒரு ஹெக்டருக்கு 100,000 ரூபாயும் இழப்பீடு வழங்குமாறு அமைச்சரவை அனுமதியைக் கோருவதாக அவர் கூறியுள்ளார்.