சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்திய ராட்சத முதலை
அளுத்கம - மொரகல்ல கடற்கரையில் திடீரென்று தோன்றிய ராட்சத முதலை காரணமாக சுற்றுலாப் பயணிகள் அச்சமுற்று ஓடித்தப்பியுள்ளனர்.
மொரகல்லை கடற்கரை உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நீராடுவதற்கு விருப்பமான கடற்கரைகளில் ஒன்றாகும்.
இன்று ஞாயிறு தினம் என்பதால் அங்கு வழக்கத்திற்கு மாறாக பெருந்தொகையான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்தனர்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்
இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் குளித்த இடத்தில் திடீரென்று (19) பத்து அடி நீளம் கொண்ட ராட்சத முதலை தோன்றியுள்ளது.
ராட்சத முதலையைக் கண்டவுடன் அங்கிருந்த அனைவரும் விழுந்தடித்துக் கொண்டு கடற்கரையை விட்டு ஒதுங்கிப் போயுள்ளனர்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உடனடியாக கடற்கரையை விட்டு வெளியேறி சுற்றுலா விடுதி அறைகளுக்குச் சென்றுள்ளனர்.
இதற்கிடையே பொதுமக்கள் வழங்கிய தகவலை அடுத்து அங்கு வந்த அளுத்கம மொரகல்ல சுற்றுலாப் பொலிஸார், முதலை குறித்து ஹிக்கடுவ வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.
இருந்த போதிலும் இதுவரை வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து சேரவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.