இனவாதத்தை ஒழிக்க தமிழ்-முஸ்லிம் கட்சிகளை அவசரமாக சந்தித்த ஜனாதிபதி
இனவாதத்தை ஒழிக்கவும் 'இலங்கையர் தினத்தை' நடத்தவும் ஜனாதிபதி அநுரகுமார, எம்மை அழைத்து எமது ஒத்துழைப்புகளை கோரினார் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தமிழ்-முஸ்லிம் கட்சிகளை அவசரமாக சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு, இன்று (22-11-25) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
சந்திப்பு
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,''எனது பதில் உரையில் நான் ஜனாதிபதியிடம் கூறியதாவது, இனவாதத்தை ஒழிக்க, நீங்கள் கோரும் ஒத்தாசைகளை முழுமையாக வழங்குவோம்.

நாட்டின் அனைத்து இன, மத, மொழி, தனித்துவங்கள் பேணி பாதுகாக்க பட வேண்டும். அதற்கு சமாந்திரமாக, 'இலங்கையர் அடையாளம்' பேணி வளர்க்க பட வேண்டும்.
இலங்கையில், அனைத்து பிரிவினருக்கும் இடையில், 'உரிமைகளின் சமத்துவம்' இருக்க வேண்டும்.
இலங்கை தின கொண்டாட்டங்களின் போது, இலங்கையின் பல்வேறு இனங்களை பிரதிநிதித்துவபடுத்தும், முகமாக கலாசார ஊர்வலம் நடத்துங்கள். இலங்கையின் பன்மைத்துவம் பற்றி, முதலில் இலங்கையர் அறிந்துகொள்ள வழி செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.
மேலும், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில், என்னுடன் பழனி திகாம்பரம் எம்பியும் மற்றும் பல்வேறு கட்சிகளின் தமிழ், முஸ்லிம் எம்பிக்கள் கலந்துகொண்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.