இந்தியாவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டுக்கொலை!
இந்தியா – உத்தரபிரதேசத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆதிக் அஹமட் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியில் செய்தியாளர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, அருகில் வந்த மர்ம நபர்கள் அவர்கள் இருவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஆதிக் அஹமட் மீது கடத்தல், கொலை உள்ளிட்ட சுமார் 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆயுள் தண்டனை விதிப்பு
கடந்த மார்ச் 28 ஆம் திகதி, கடத்தல் வழக்கில் அஹமட் மற்றும் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில் கடத்தல் சதித்திட்டத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆதிக் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர், மருத்துவ பரிசோதனையொன்றுக்காக பொலிஸாரின் பாதுகாப்புடன் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்றிருந்த போதே மர்மநபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் காட்சி தொலைக்காட்சி நேரலை காட்சிகளில் பதிவாகியுள்ளது.
இதற்கமைய மூன்று சந்தேகநபர்கள் உடனடியாக சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.