அரச ஊழியர்களுக்கு இன்று முதல் கட்டாயமாகும் நடைமுறை

Sri Lanka
By Nafeel May 15, 2023 12:55 PM GMT

இன்று (15) முதல் அரச ஊழியர்களுக்கு வருகையை குறிக்கும் கைவிரல் அடையாள இயந்திரத்தைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை கடந்த 12 ஆம் திகதி பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டது.

மேலதிக நேர கொடுப்பனவு கொவிட் தொற்றுநோய் காரணமாக கடந்த சில ஆண்டுகளில் கைரேகை இயந்திரங்களின் பயன்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், காலை 10 மணிக்கு பணிக்கு வந்திருந்த போதிலும், சில ஊழியர்கள் தமது வருகை நேரத்தை காலை 8 மணி என குறிப்பிட்டு அதனை சாதகமாக பயன்படுத்தியதாக தகவல் வெளியானதை அடுத்து மீண்டும் கைரேகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்கள் பலர் இவ்வாறு மேலதிக நேர கொடுப்பனவுகளை பெற்றுக் கொண்டுள்ளதாகவும், சுகாதார அமைச்சுக்குள்ளேயே இந்த நிலைமை அதிகமாக காணப்படுவதாகவும் தெரியவந்திருந்தது.

இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில், இன்று முதல் கைவிரல் அடையாள இயந்திரம் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.