இம்ரான்கானுக்கு மீண்டும் பிணையில்லா பிடியாணை: பாக். நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு மீண்டும் பிணையில் வெளிவர முடியாத பிடியாணையினை அந்நாட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பண மோசடி, வன்முறையைத் தூண்டுதல் உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இதில் எந்தவொரு வழக்கின் விசாரணையிலும் இம்ரான்கான் நேரில் முன்னிலையாகாததால் அவருக்கு எதிராக நேற்றைய தினம் (31.03.2023) பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த வழக்குகளில் அவருக்குப் பிணை கிடைத்துள்ளது.
பிடியாணை
இந்த நிலையில், பெண் நீதிபதி ஒருவருக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் தற்போது இம்ரான்கானுக்குப் பிணையில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய இம்ரான்கான், கூடுதல் மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஜெபா சவுத்ரிக்கு மிரட்டல் விடுத்தமைத் தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் விசாரணை இடம்பெற்று வருகிறது.
இது தொடர்பான விசாரணைக்கு இம்ரான்கான் இதுவரை நேரில் முன்னிலையாகாத நிலையில் நேற்றைய தினம் அவருக்கு எதிராகப் பிணையில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்த நீதிபதி, அவரை ஏப்ரல் 18ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.