ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் தெரிவு குறித்து வெளியான தகவல்
ஏறாவூர் நகர சபையின் தவிசாளராக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எஸ். நழீம் மற்றும் பிரதி தவிசாளராக ஜனநாயக தமிழ் கூட்டமைப்பை சேர்ந்த ஞானசேகரன் கஜேந்திரன் ஆகியோர் இன்று திங்கட்கிழமை (16) தெரிவு செய்யப்பட்டனர்.
17 உறுப்பினர்களைக் கொண்ட ஏறாவூர் நகர சபைக்கான தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் பதவிக்கான வாக்கெடுப்பு, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இன்று நடைபெற்றது.
பதவிக்கான வாக்களிப்பு
தவிசாளர் பதவிக்கு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போதைய நகர சபை உறுப்பினருமான முஹம்மட் சாலி நழீம் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.எஸ்.சமீம் ஆகியோர் போட்டியிட்டனர்.
தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த ஒருவரின் பங்கேற்பு இல்லாத நிலையில் 16 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
வாக்களிப்பில், எம்.எஸ்.நழீம் ஆதரவாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 7 உறுப்பினர்கள், ஜனநாயக தமிழ் கூட்டமைப்பின் 1 உறுப்பினர் மற்றும் தமிழரசுக் கட்சியின் 1 உறுப்பினர் என மொத்தம் 9 வாக்குகள் கிடைத்தன.
இதில் எம்.எஸ்.சமீம் ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியின் 4 உறுப்பினர்கள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் 2 உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த 1 உறுப்பினர் என 7 வாக்குகள் அளிக்கப்பட்டன.
இதன் அடிப்படையில் 2 மேலதிக வாக்குகளுடன் நழீம் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
தவிசாளர் தெரிவு
பிரதி தவிசாளர் பதவிக்கு, ஜனநாயக தமிழ் கூட்டமைப்பின் ஞானசேகரன் கஜேந்திரன் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஏ.எம்.எம். அன்வர் போட்டியிட்டனர்.
இங்கு ஞானசேகரன் கஜேந்திரனுக்கு 9 வாக்குகள், அன்வருக்கு 7 வாக்குகள் அளிக்கப்பட்டன.
மேலும், இந்த நிகழ்வில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா, தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




