சுற்றாடல் மாசுபாட்டிற்கு இந்த வருடத்தில் முற்றுப்புள்ளி! நஸீர் அஹமட்
சுற்றாடல் மாசுபாட்டிற்கு இந்த வருடத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று சுற்றாடல் அமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
சுற்றாடல் அமைச்சின் வழிகாட்டலில் மத்திய சுற்றாடல் அதிகார சபையுடன் இணைந்து உள்ளுராட்சி மன்றப் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தும் நகர தூய்மையாக்கல் வேலைத்திட்டம் ஏறாவூர் மட்டக்களப்பு வாவிக்கரையோரம் நெடுகிலும் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அமைச்சர்,
சுற்றாடல் தூய்மையாக்கலின் கீழ் குறிப்பாக நீர் நிலைகள், ஊறணிகள், வாவிக் கரையோரங்கள். கடற்கரைகள் இந்த விடயத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன.
சுற்றாடலைப் பேணிப் பாதுகாக்கும் முழு விடயங்களையும் அவதானிப்பவர்களாக இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்படுவார்கள்.
ஏறாவூர் நகரப் பிரதேசம் அதனை அண்டியுள்ள வாவி எல்லாம் சுற்றாடல் மாசுபடுகின்ற அளவுக்கு கழிவகற்றல் செய்ய முடியாத இடமாக மாறியிருக்கின்றது.
நாட்டின் சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலுமுள்ள சுற்றாடல் மாசுபாட்டுக்கு இந்த வருடத்திலே ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.
பிரதேச செயலக இளைஞர் யுவதிகளும் ஆர்வமுள்ள செயற்பாட்டாளர்களும் இந்த சுற்றாடலைப் பேணிப் பாதுகாக்கும் செயற்திட்டத்தில் ஒரு அங்கமாக உருவாக்கப்படவுள்ளார்கள்.” என்றார்.
இந்நிகழ்வில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ். பத்திரகே, பணிப்பாளர் ஹேமந்த ஜயசிங்ஹ, அதன் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் எம். சிவகுமார் உட்பட மத்திய சுற்றாடல் சபையின் மற்றுமுள்ள அதிகாரிகள், ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஹர்ஷ டி சில்வா, பொலிஸ் நிலைய நிருவாகப் பொறுப்பதிகாரி எஸ்.எல். சறூக், ஏறாவூர் நகர சபைச் செயலாளர் எம்.எச்.எம். ஹமீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



