அதிகரிக்கவுள்ள மின் கட்டணம்
நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை தொடர்ந்தும் நீடித்தால் மின்கட்டணம் அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப்படுகின்றன என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி(Kumara Jayakody) தெரிவித்துள்ளார்.
நேற்று(24) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட பொறியியலாளர்களின் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
மின்சாரக் கட்டணங்களை 20 வீதம் குறைத்தோம். ஆனால், வறட்சி இவ்வாறு தொடர்ந்தால் மின்கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
மின்சார சபைக்கான வரவு செலவு
எங்களுக்கு செலவு என்பது இலாபமாகவோ அல்லது மீதியாகவோ இல்லை. இதன் காரணமாக, எங்களை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டுமானால், சில திருத்தங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால் அதற்கு தற்போது நாங்கள் விரும்பவில்லை.
மின்சார சபை 140 பில்லியன் ரூபாய் இலாபம் என்று கூறுகிறது. ஆனால், எப்போதும் அந்த பொய்யைச் சொல்கிறார்கள். மின்சார சபைக்கு இலாபம் இல்லை, ஒவ்வொரு காலாண்டிலும் விலை மாறும்போது ஒரு மீதி கிடைக்கின்றது.
முந்தைய 6 மாதங்களின் மீதியை அடுத்த 6 மாதங்களுக்கு எடுத்துக்கொள்கிறோம். அதன் மூலம் தான் ஒரு முன்னறிவிப்பு செய்யப்படுகிறது. அந்த முன்னறிவிப்பைச் சொல்லும்போது, மீதமுள்ள தொகையை செலவு செய்த பின்னரே எடுத்துக்கொள்கின்றோம்.
அதனால் ஆண்டு முடிவில் இலாபம் எதுவும் மீதியாக இருப்பதில்லை. கடந்த ஆண்டு 140 பில்லியன் இருந்தது, அது செலவுகளில் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் 46 பில்லியன் மட்டுமே மீதியாக வந்தது.
அந்த 46 பில்லியனை இதில் சேர்த்தால், இந்த 6 மாதங்களில் 42 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுகிறது. இந்த வறட்சி அதிகரித்தால் அது மேலும் அதிகரிக்கும், என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |