மக்களின் பிரச்சினைகளை நன்கு தெரிவிந்தவர்களையே பிரதிநிதியாக தெரிவு செய்ய வேண்டும்: ரிசாத் பதியுதீன்
எமது வாக்குகளினால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் எமது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் நன்றாக தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
கல்முனை - மாளிகைக்காட்டில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், எமது மக்களை வழிநடத்த தூய்மையான அரசியல்வாதிகளை அரசியலின் ஆரம்ப படியிலிருந்தே உருவாக்க வேண்டும்.
மக்களின் தேவைகள்
பொய்யான வாக்குறுதிகளுக்கும், ஏமாற்று வேலைகளுக்கும் மக்கள் துனை போனால் நமது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.
எமது மக்களின் தேவைகள் என்ன என்பதும் அவர்களின் எதிர்காலம் என்ன என்பதும் தெரியாமலே தமது காலத்தை கடத்தியவர்களை நாம் நிராகரிக்க வேண்டும்.
எங்களின் வேட்பாளர்கள் சமூக பற்றுள்ளவர்கள், எதிர்கால சந்ததிகள் பற்றிய கவலையை உடையவர்கள் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளரும், கட்சியின் பிரதித்தேசிய அமைப்பாளருமான எம்.ஏ. அஸ்ரப் தாஹீர், உயர்பீட உறுப்பினர்களான மான்குட்டி ஜுனைதீன், மாவட்டகுழு செயலாளர் ஆசிரியர் ஏ.சி.ஏ.காதர், பொருளாளர் தொழிலதிபர் கலீல் முஸ்தபா உட்பட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.