இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளுக்கு சுகாதார சான்றிதழ்!
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளுக்கு சுகாதார சான்றிதழ் அறிக்கை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகக் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இச்சான்றிதழ் இன்றைய தினம் (13.04.2023) வழங்கப்படும் என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஹேமாலி கொத்தலாவல, ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போது இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒரு மில்லியன் முட்டைகள் கொண்ட மற்றுமொரு கையிருப்பு அண்மையில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டதுடன், அவற்றைத் துறைமுகத்திலிருந்து விடுவிப்பதற்குக் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அனுமதி பெறப்படவிருந்தது.
முட்டை கையிருப்பின் மாதிரிகள்
இந்த திணைக்களம் கடந்த சனிக்கிழமை குறித்த முட்டை கையிருப்பின் மாதிரிகளை எடுத்துக் கொண்டுள்ளதுடன், நேற்று வரை அவை துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்படுவதற்கான சுகாதார சான்றிதழ் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், இச் சான்றிதழ் இன்றைய தினம் (13.04.2023) வழங்கப்படும் என ஹேமாலி கொத்தலாவல கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட முட்டை தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.