கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக ஏ.எல்.எம்.அஸ்மி கடமையேற்பு
கிழக்கு மாகாண விவசாய நீர்ப்பாசன, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, மீன்பிடி, கூட்டுறவு அபிவிருத்தி உணவு வழங்கலும் விநியோகத்திற்குமான அமைச்சின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவை விசேட தர அதிகாரி ஏ.எல்.எம்.அஸ்மி தனது கடமையை பொறுப்பேற்றார்.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் நேற்றையதினம் (17) நியமிக்கப்பட்டு விவசாய அமைச்சின் கடமைகளை உடன் செயற்படும் வண்ணம் கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
பதவி நியமனம்
இலங்கை நிர்வாக சேவையின் மூத்த அதிகாரியான ஏ.எல்.எம்.அஸ்மி, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக பதவி வகித்து வரும் நிலையில், கிழக்கு மாகாண விவசாய நீர்ப்பாசன, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, மீன்பிடி, கூட்டுறவு அபிவிருத்தி உணவு வழங்கலும் விநியோகத்திற்குமான அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொத்துவில், அக்கரைப்பற்று உதவி பிரதேச செயலாளர், அக்கரைப்பற்று மாநகராட்சி ஆணையாளர், கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளரும், பதிவாளரும், கல்முனை மாநகராட்சி ஆணையாளர், மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர், கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர், (ஆளணி மற்றும் பயிற்சி) கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஆகிய பதவிகளில் அவர் வினைத்திறன் மிக்க அதிகாரியாக கடமையாற்றியுள்ளார்.
கிழக்கிற்கான சேவை
இலங்கை நிர்வாக சேவையில் 22 வருடங்கள் கடந்து பயனிக்கும் இவர் அரச கடமையினை சட்ட விதிமுறைகளை பேணி தான் எடுத்த உறுதி மற்றும் சத்திய உரை என்பவற்றுக்கு ஏற்ப நேர்மையாக செய்துவரும் ஒருவராவார்.
அஸ்மியின் சேவைத்தரம், தகுதி மற்றும் அனுபவம் என்பவற்றின் அடிப்படையிலும் தலைமைத்துவ வழிகாட்டுதல்கள், நிர்வாக மற்றும் முகாமைத்துவ செயற்பாட்டு திறமைகள் என்பவற்றைக் கருத்திற்கொண்டும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |