உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: எழுத்து மூலம் வழங்கப்பட்டுள்ள உறுதி

Gotabaya Rajapaksa Maithripala Sirisena Easter Attack Sri Lanka
By Sivaa Mayuri Apr 18, 2024 10:45 AM GMT

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் (Easter Attack) தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துச்செல்வது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி கத்தோலிக்க திருச்சபைக்கு எழுத்து மூல உறுதியை வழங்கியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபசக்ச (Gotabaya Rajapakss) வாய்மொழியாக உறுதியளித்துள்ள போதிலும், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பதை கர்தினால் மல்கம் ரஞ்சித் நினைவு கூர்ந்துள்ளார்.

இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு சமர்ப்பித்த அறிக்கையின் எஞ்சிய பகுதிகள் கத்தோலிக்க திருச்சபைக்கு கிடைத்துள்ளதாக கர்தினால் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற விவாதம்

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithiripala Sirisena) வெளிப்படுத்தியதையடுத்து நாடாளுமன்றத்தில் புதிய மூன்று நாள் விவாதம் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24, 25 மற்றும் 26ஆம் திகதிகளில் நாடாளுமன்றம் கூடும் எனவும், எதிர்க்கட்சிகள் முன்வைத்த பிரேரணைக்கு இணங்க, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் குறித்த மூன்று நாட்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பயனுள்ள விவாதமாக இருக்குமா அல்லது 45 மில்லியன் ரூபாய்களை செலவிட்ட சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா யோசனையை போன்று பயனற்றதாக அமைந்து விடுமா என்பது தொடர்பில் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.