இலங்கையில் விரைவில் கப்பல் விபத்துக்கள் தொடர்பான சட்டமூலம்
இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகும் கப்பல்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான சட்டமூலத்தை உருவாக்க காலநிலை மாற்றங்கள் தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் ருவன் விஜேவர்த்தன அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு சமுத்திரவியல் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் என்பவற்றுக்கு அவர் பணிப்புரையை விடுத்துள்ளார்.
சட்டமூல வரைபு
கடந்த காலத்தில் எக்ஸ்பிரஸ் பேர்ள், ப்ளூ டயமண்ட் உள்ளிட்ட கப்பல்கள் இலங்கைக் கடற்பரப்பில் விபத்துக்கு உள்ளாகி, கடற்பரப்பு மற்றும் சுற்றுச் சூழலுக்கு பெரும் தீங்கு நேர்ந்திருந்தது.
எனினும், அவை தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான சட்ட ஏற்பாடுகள் இலங்கையில் நடைமுறையில் இருக்கவில்லை.
அதன் காரணமாக இனிவரும் காலங்களில் அவ்வாறான விபத்துக்கள் ஏற்படுமிடத்து சட்ட நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்ளும் வகையில் அதற்கான சட்டமூல வரைபு ஒன்றை உருவாக்குவதே ருவன் விஜேவர்த்தனவின் முன்னெடுப்பாக உள்ளது.