கோவிட் தொற்று பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டாம்: சுகாதார அமைச்சு உத்தரவு!
கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டாம் என்று மத்திய சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பான அறிவித்தல் நேற்றைய தினம் (18.04.2023) யாழ். போதனா மருத்துவமனைக்கும், வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் கோவிட் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து போதனா மருத்துவமனையில் நோயாளிகளுக்கு கோவிட் சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள்
தொடர்ந்தும் இந்தச் சோதனைகளை முன்னெடுப்பதற்கான அனுமதி போதனா மருத்துவமனையால் கோரப்பட்டிருந்தது. இந்தநிலையில், கோவிட் தொற்றைக் கண்டறிவதற்கான சோதனையை முன்னெடுக்க வேண்டாம் என்று சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளரால் 'சூம்' செயலி ஊடாக முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலிலும் இந்தத் தகவல் சுகாதார சேவைகள் பணிப்பாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற வருபவர்களில் கோவிட் தொற்றுக்குரிய அறிகுறிகளைக்
கொண்டிருந்தால், அவர்களுக்கு வேறு நோய்கள் இனங்காணப்படாவிட்டால் மாத்திரமே
கோவிட் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு அமைச்சு வாய்மொழி மூலமாக
அறிவுறுத்தியுள்ளது.