கடவுச்சீட்டு தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு

Sri Lanka Immigration Department of Immigration & Emigration
By Fathima Apr 01, 2023 01:42 PM GMT
Fathima

Fathima

ஜனவரி மாதத்திலிருந்து இதுவரையான காலப்பகுதியில் 2 இலட்சத்து 78 ஆயிரத்து 117 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

சாதாரண சேவை, ஒருநாள் சேவை ஊடாக கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதன் பிரதிக் கட்டுப்பாட்டு ஊடக பேச்சாளர் ஹன்சிக்கா குமாரசிங்க தெரிவித்துள்ளார். 

தூதரக காரியாலயங்கள் ஊடாக கடவுச்சீட்டு விநியோகம் 

இதேவேளை, வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்களுக்கு அந்த நாடுகளின் தூதரக காரியாலயங்கள் ஊடாக கடவுச்சீட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடவுச்சீட்டு தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு | Department Of Immigration Emigration Today

இந்தநிலையில், கடவுச்சீட்டு ஒன்று காணாமல் போனால் விரைவாக அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்குமாறு அவர் கோரியுள்ளார்.

கடவுச்சீட்டு ஒன்று வழங்கப்பட்ட திகதியிலிருந்து ஒரு வருடத்துக்குள் காணாமல் போகுமாயின் அதற்காக 20 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும் எனவும், கடவுச்சீட்டு ஒன்று வழங்கப்பட்ட திகதியிலிருந்து ஒரு வருடத்தின் பின்னர் காணாமல் போனால் அதற்காக 15 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன கடவுச்சீட்டு

இந்தநிலையில், குறித்த கடவுச்சீட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையம் ஊடாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு அறியப்படுத்தப்படும். அதன்பின்னர் இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸார் ஊடாக களவாடப்பட்ட மற்றும் காணாமல் போன கடவுச்சீட்டு என்ற முறையில் அறியப்படுத்தப்படும்.

அதற்கமைய, மீளவும் குறித்த கடவுச்சீட்டை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலையில் இரத்து செய்யப்படும். இந்தநிலையில், புதிய கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள பொலிஸாரின் அறிக்கையை பெற்றுக்கொண்டு குடிவரவு மற்றும் குடியல்வு திணைக்களத்தில் விண்ணப்பத்தை தாக்கல் செய்ய முடியும் என ஊடக பேச்சாளர் ஹன்சிக்கா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.