இதுவரையில் 38 டெங்கு மரணங்கள் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 61,000ஐ தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள, அதிக ஆபத்துள்ள பிரதேசங்களின் எண்ணிக்கை 34 ஆகக் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் இன்று (26.08.2023) வரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 61,225 என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனவரி முதல் ஜூலை வரையிலான கால பகுதியுடன் ஒப்பிடுகையில் ஆகஸ்ட் மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு நோயாளர்களின் விபரம்
அதன்படி, ஜூலை மாதத்தில் 7,369 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் 4,536 டெங்கு நோயாளர்கள் மட்டுமே பதிவாகியுள்ளனர்.
மேலும் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 13,053 என டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் 12,963 டெங்கு நோயாளர்களும், கண்டியில் 4,976 பேரும், களுத்துறையில் 3,949 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
இந்த வருடத்தில் இதுவரை 38 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவிக்கிறது.