இலங்கையில் மீண்டும் பதிவாகிய கோவிட் தொற்று மரணம்!

COVID-19 Jaffna Sri Lanka
By Nafeel Apr 21, 2023 03:04 AM GMT

கோவிட் பெருந்தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணத்தில் மீண்டும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் நேற்றிரவு(21.04.2023) உயிரிழந்துள்ளார்.

கடந்த (15.04.2023) ஆம் திகதி குறித்த நபருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில் கடுமையான மூச்சுத் திணறலாலும் தொற்றின் தீவிரம் காரணமாகவும் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் உடல் உரிய முறையில் பொதி செய்யப்பட்டு இறுக்கிரியைகளுக்காக உறவுகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதோடு சுகாதார அமைச்சின் சுற்றறிக்கைகளுக்கு அமைவாக சடலம் வெளியே எடுக்கப்பட்டு சடங்குகள் செய்வதற்கு அனுமதிக்கப்படமாட்டாது என்று யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் யாழ்ப்பாணத்தில் கோவிட் அறிகுறியுடன் 5 நோயாளர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இதற்கிடையில் கோவிட் பரிசோதனைகளை நடத்த வேண்டாம் என்று சுகாதார அமைச்சு அறிவித்திருப்பதால் மேலதிக தொற்றாளர்களை அடையாளம் காண்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.