விக்னேஸ்வரனை கொலை செய்ய இருந்த சிங்கள இளைஞன்
தன்னை கொலை செய்ய வேண்டும் எண்ணத்தில் இருந்த சிங்கள இளைஞன் தன் தவறை உணர்ந்து மனம் மாறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் ஆரியரட்ண வின் தமிழ் பௌத்தர்கள் தொடர்பான நூலை வாசித்த பின்னர் இளைஞன் மனம் மாறிய தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள கேள்வி பதிலிலேயே இவ்விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் பௌத்தர்கள்
அவர் குறித்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்து தெரிவிக்கையில், என்னுடைய சில கேள்வி பதில்களை வாசித்துவிட்டு என்னுடன் தொலைபேசியில் பேசி ஒரு படித்த சிங்கள இளைஞர் உங்களைக் கொல்ல வேண்டும் என்ற கொலை வெறியில் இருந்தேன்.
பேராசிரியர் ஆரியரட்ணவின் சிங்கள நூலான 'தெமள பௌத்தயா'வை (தமிழ் பௌத்தர்கள்) வாசித்த பின்னர் தான் உங்கள் கூற்றுக்களின் உண்மையைப் புரிந்து கொண்டேன். உங்களை வந்து சந்திக்க விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.
அதற்கு தாராளமாக வாருங்கள்! கொல்ல வேண்டும் என்றாலும் வாருங்கள்! எனக்கு இப்பொழுது 83 வயது (அப்போதைய வயது). தொடர்ந்து இந்த உலகத்தில் இருக்க வேண்டும் என்ற ஆசை எதுவும் எனக்கில்லை என தான் தெரிவித்தாக விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
போதிய அறிவு இல்லாமை
இன்றுவரை அவர் என்னை வந்து சந்திக்கவில்லை. ஆனால் அவர் தமது மனமாற்றத்தை வெளியிட்டமை தான் இந்தக் கேள்வி – பதிலுக்கு முக்கியமானது.
சிங்கள மக்களுக்கு எம்மைப் பற்றிய போதிய அறிவு இல்லாமையே தமிழ் - சிங்கள உறவானது இன்றும் மேம்படாமல் இருப்பதற்குக் காரணம் என்று விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.