இலங்கை எரிபொருள் விற்பனை சந்தையில் நுழையும் வெளிநாட்டு நிறுவனங்கள்
இலங்கையில் எரிபொருள் விற்பனை சந்தையில் நுழைவதற்கு மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.
இதற்கமைய சீனாவின் சினோபெக், அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் மற்றும் அமெரிக்காவின் ஆர்எம் பார்க்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான ஷெல் பிஎல்சியுடன் இணைந்து இலங்கையில் எரிபொருள் விற்பனை சந்தையில் நுழைவதற்கான உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த மூன்று நிறுவனங்களுக்கும் இலங்கையில் இயங்குவதற்கான உரிமங்களை வழங்குவதற்கு எரிசக்தி குழு மற்றும் தொடர்புடைய பிற கொள்முதல் குழுக்கள் ஒப்புதல் மற்றும் பரிந்துரையை வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மூன்று நிறுவனங்களுக்கும் 150 டீலர்களால் இயக்கப்படும் எரிபொருள் நிலையங்கள் ஒதுக்கப்படும், அவை ஒவ்வொன்றும் தற்போது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் (CPC) இயக்கப்படுகின்றன.
இலங்கையில் பெற்றோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும், சேமித்து வைப்பதற்கும், விநியோகிப்பதற்கும் மற்றும் விற்பனை செய்வதற்கும் 20 வருடங்கள் செயற்படுவதற்கு அவர்களுக்கு உரிமம் வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு நிறுவனத்தாலும் புதிய இடங்களில் மேலும் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நிறுவப்படும் என அமைச்சர்மேலும் தெரிவித்தார்.