விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு (Wimal Weerawansa) எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சிய விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் 22 ஆம் திகதி நடத்த கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுமார் 75 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை எவ்வாறு ஈட்டினார் என்பதை வெளிப்படுத்த தவறிய குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு எதிராக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று (17.09.2025) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிணையில் விடுதலை
இதன்போது, குறித்த வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள விமல் வீரவன்சவும் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
விமல் வீரவன்ச சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, சமர்ப்பணங்களை முன்வைத்து, வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்ய நேரம் தேவைப்படுவதாக நீதிமன்றத்தில் கோரினார்.
இதைக் கருத்தில் கொண்டு, சாட்சி விசாரணையை ஒக்டோபர் 22 ஆம் திகதி அழைக்க உத்தரவிடப்பட்டது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு
அத்துடன் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையான சாட்சியாளர்களை அன்றைய தினம் முன்னிலையாகுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
2010 மற்றும் 2014 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அமைச்சராக பணியாற்றியபோது விமல் வீரவன்ச ஈட்டிய சுமார் ரூபா 75 மில்லியனுக்கு அதிகமான சொத்துக்களை எவ்வாறு உழைத்தார் என்பதை வெளியிடத் தவறியமைக்காக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.